வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது அம்ரித் மொண்டல் (வயது 29) என்ற மற்றொரு இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவிற்கு அருகே உள்ள ராஜ்ஜபாரி மாவட்டத்தின் பாங்சா பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

“பணம் பறிக்க முயன்றார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு அம்ரித்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்; இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்தத் தொடர் தாக்குதல்கள் வங்கதேசத்தில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் பதற்றமான சூழலுக்கு இடையே, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலேதா ஜியாவின் மகனும், பிஎன்பி (BNP) கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் லண்டனிலிருந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வங்கதேசம் திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்குப் லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாயார் காலேதா ஜியாவைச் சந்தித்துப் பேசிய அவர், “ஜாதி, மதம் கடந்து அனைவரும் பாதுகாப்பாக வாழும் வங்கதேசத்தை உருவாக்குவதே எனது லட்சியம்” எனத் தனது முதல் உரையில் குறிப்பிட்டார். பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தாரிக் ரஹ்மானின் வருகை அந்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.