உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குடம்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று அதிவேகமாக வந்த இ-ரிக்‌ஷா ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாக்கடையில் விழுந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு இ-ரிக்‌ஷா திடீரென திறந்தவெளி சாக்கடைக்குள் பாய்ந்த இந்தக் கொடூரக் காட்சி அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

விபத்து குறித்துத் தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி தரப்பில் அஜாக்கிரதை ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றிய குடம்பா போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், விபத்துக்குள்ளான வாகனத்தின் வேகம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து கண்காணிப்புப் படக்கருவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.