மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் நடந்த இயற்கை வேளாண் சந்தை (Organic Market) திறப்பு விழாவில், அம்மாநில அமைச்சர் கௌதம் தேட்வால் கலந்துகொண்டார்.

விழா மேடையில் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்த கையோடு, கடைகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முள்ளங்கியை எடுத்து அப்படியே கடித்துச் சாப்பிட்டார். அடுத்த விநாடியே பழக்கடைக்குச் சென்றவர், இரண்டு கொய்யாப்பழங்களை எடுத்து ருசி பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.

காய்கறிகளை ருசி பார்த்தது மட்டுமன்றி, மற்றொரு கடையில் இருந்த பச்சை மஞ்சளை (Raw Turmeric) பார்த்த அமைச்சர், அதன் தரம் குறித்துக் கேட்டறிந்தார்.

அது முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது எனத் தெரிந்ததும், “ஒரு கிலோ மஞ்சளை அப்படியே என் அலுவலகத்திற்கு (Office) கொண்டு வாருங்கள்” என அந்த வியாபாரிடம் ஜாலியாக ஆர்டர் கொடுத்தார்.

அமைச்சரின் இந்தச் செயலைச் சிலர் எதார்த்தமான அணுகுமுறை எனப் பாராட்டினாலும், அரசுப் பதவியில் இருப்பவர்கள் பொது இடத்தில் இப்படியா நடந்துகொள்வது என நெட்டிசன்கள் சிலர் விவாதித்து வருகின்றனர்.