முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணிக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜேஷ்வரனை விமான நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ ஒருமையில் பேசி வீடியோ வெளியிட்ட நபரை தாக்கியதாக EPS உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என ஆர்பி உதயகுமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது, இபிஎஸ் மீது பொய் வழக்கை போட்டு திமுக அரசு சர்வாதிகார போக்கை காட்டுகிறது. இந்த சர்வாதிகார போக்கு தொடர்ந்தால், அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறவும் தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.