பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (33) என்ற வாலிபரை அபிநயா கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அது குறித்து அபிநயா நியாயம் கேட்டுள்ளார். இந்நிலையில் அரியலூர் நெடுஞ்சாலையில் பார்த்திபனுடன் அபிநயா சென்ற நிலையில் சாலை தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் அபிநயா கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிநயாவை பார்த்திபன் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பார்த்திபனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சோசியல் மீடியாவில் #Justice For Abinaya என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.