
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் லட்சுமியிடம் பேச்சு கொடுத்தபடி அருகில் வந்தார்.
அவர் திடீரென லட்சுமியின் கை மற்றும் கால்களை கட்டி அவர் கழுத்திலிருந்த தாலி கயிற்றில் இருந்து 1 பவுன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த தகவல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் காவல்துறையின் தலைமையில் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த 23ஆம் தேதி அந்த பகுதிக்கு வந்து சென்றவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டது. அதில் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த லட்சுமியிடம் இருந்து நகைகளை திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த நகைகளை கைப்பற்றி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தற்போது நீதிமன்றத்தில் மணிகண்டனை ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்து அவரிடம் இருந்த நகைகளை மீட்டு சிறையில் அடைத்த காவல்துறை தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.