அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரீஹோல்ட் நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஒருவர் முன்பள்ளி கட்டிடத்தின் மீது மோதிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ளூம் அகாடமி எனப்படும் அந்தப் பள்ளியிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு தாய் வெளியே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் அவர்களை நோக்கி வந்துள்ளது.

 

அந்தப் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சித்தும், அந்த கார் பள்ளியின் சுவரில் பயங்கரமாக மோதியதுடன் அந்தத் தாய் மற்றும் குழந்தைகள் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் சுவர்கள் இடிந்து சேதமடைந்ததுடன், காரின் முன்பகுதி நசுங்கியது. விபத்தில் சிக்கிய தாயும் குழந்தைகளும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபரின் இந்த அத்துமீறிய செயலால் ஏற்பட்ட விபத்து, சாலை பாதுகாப்பு மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.