சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தற்போது தனது சர்வதேச டி20 கேப்டன்சி மற்றும் அணியில் தனது இடத்தை இழந்தது மட்டுமன்றி, ஐபிஎல் தொடரிலும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டும் விலகப் போகிறார் என்ற  தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை காலையில் சூர்யகுமார் யாதவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான எந்தவொரு பதிவுகளும், புகைப்படங்களும் ரசிகர்களின் கண்ணில் படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், சூர்யகுமார் தனது இன்ஸ்டா புரொபைல் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து, அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ‘டாட்டா’ காட்டப் போகிறார் என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சூர்யகுமார், அந்த அணியின் பல வரலாற்று வெற்றிகளுக்கு முக்கிய தூணாக இருந்துள்ளார். ஆனால், நடந்து முடிந்த 2026 ஐபிஎல் சீசனில் அவர் 20.77 என்ற மிகக் குறைந்த சராசரியுடன் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார்; இதில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடங்கும். அவரது ஃபார்ம் அவுட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், தற்போது அணி நிர்வாகம் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், சூர்யகுமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கணக்குகள் எதுவும் பின்தொடரப்படவில்லை (Unfollow) என்றும், ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனியுடன் அவர் இருக்கும் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே அவரது பக்கத்தில் எஞ்சியுள்ளது என்பதும் ரசிகர்களிடையே இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது.