
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:- மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்று. இதற்கான சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடக்க உள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு முகாமானது 2 நாட்கள் தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கான தற்போதைய வட்டிவீதம் 7.6 %. மேலும் இத்திட்டத்தில் சேருவதற்கு 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 250 ரூபாய் பணம் செலுத்தி கணக்கு தொடங்கலாம்.
இத்திட்டத்திற்கு கணக்கு தொடங்கி, 15 ஆண்டுகள் வரை பணத்தை செலுத்த வேண்டும். பின் இதற்கான முதிர்வு காலம் 21 ஆண்டுகள் மற்றும் இதில் பணம் செலுத்துவதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. இதனையடுத்து பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவில், செலுத்திய தொகையில் 50 சதவீதம் எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. பிள்ளைகளின் திருமணத்திற்கு 1 மாதம் முன் இத்திட்டத்தை முடித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. இதை பற்றிய மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். ஆகவே இம்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.