இமயமலையின் மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து, பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வரும் வேளையில் ஒரு  பொறுப்பற்ற செயல் நடந்துள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை அங்கிருந்த நபர் ஒருவர் கையில் இருக்கும் நடக்கும் கம்பால்  மீண்டும் மீண்டும் பலமாக குத்துகிறார். “இந்த முட்டாளுக்கு என்னதான் பிரச்சனை?” என்ற கேள்வியோடு வைரலாகி வரும் இந்த வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்த  இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளை இவ்வாறு சேதப்படுத்துவது கடுமையான ஆபத்துகளை விளைவிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய செயல்கள் பனிப்பாறைகளில் திடீர் விரிசல்களை ஏற்படுத்தி, நிலச்சரிவு அல்லது பனிச்சரிவு போன்ற பேராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. புனிதமான யாத்திரை தளங்களின் கண்ணியத்தை சீர்குலைப்பதோடு, சக மனிதர்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற நபர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.