ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான சாஹில் பராக் பயிற்சியின் போது படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த தீவிர பயிற்சியின் போது, எதிர்பாராத விதமாக பந்து அவரது முகத்தில் மிக பலமாகத் தாக்கியது. இதில் முகம் சிதைந்து ரத்தம் கொட்டியதால் அவர் மைதானத்திலேயே துடிதுடித்தார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்த பின், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

​மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 வயதே ஆன இந்த இளம் வீரர், இடது கை தொடக்க ஆட்டக்காரராகவும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் அசத்தி வந்தவர். சமீபத்தில் நடந்த ஏலத்தில் டெல்லி அணி இவரை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட சாஹில் பராக், இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.