இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே அடுத்த வாரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’ கையெழுத்தாக உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்து நாட்டு அமைச்சரவையில் இருந்தே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் எளிதாக குடியேற இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதால், “கட்டுப்பாடற்ற குடியேற்றம் நமது நாட்டின் சேவைகளையும், வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும்” என்று நியூசிலாந்து அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதில் ஒருபடி மேலே சென்ற அமைச்சர் ஷேன் ஜோன்ஸ், இந்தியர்களின் குடியேற்றத்தை ‘பட்டர் சிக்கன் சுனாமி’ என்று வர்ணித்தது பெரும் இனவெறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ​இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் 100% வரி இல்லாமல் நியூசிலாந்திற்குள் நுழைய முடியும். ஆனால், நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதி பொருளான பால் பொருட்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க இந்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.

தங்கள் நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள இந்த முடிவும், அதே நேரத்தில் இந்தியர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதும் நியூசிலாந்து அமைச்சர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே பிரிட்டனுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் அங்கிருந்தவர்கள் இதேபோலத்தான் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.