மத்திய அரசு கொண்டு வந்த 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, நேற்று லோக்சபாவில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாகச் சாடினார்.

“பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தடுத்துவிட்டன” என அவர் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “மோடியை திருப்திப்படுத்த மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள்” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

2023-லேயே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு கொண்டு வந்த திருத்தம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ‘தொகுதி மறுவரையறை’ தொடர்பான தந்திரம் என அவர் குற்றம் சாட்டினார். “ஆந்திர மக்கள் உங்களைத் துணை முதல்வராக்கியுள்ளனர். அவர்களின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் விற்றுவிடாதீர்கள்.

இது குறித்து விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா?” எனப் பிரகாஷ் ராஜ் சவால் விடுத்துள்ளார். லோக்சபா இடங்களை 850 ஆக உயர்த்துவதன் மூலம் வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.