மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒரு நல்ல செய்தியாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் 10 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான் அதிபர் ஜோசப் ஆன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தை இதுவாகும். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முன்னிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த போர் நிறுத்தம் லெபனானில் ஏற்பட்டுள்ள பெரும் உயிர்ச் சேதங்களுக்கு இடையே ஒரு சிறிய ஆறுதலாக வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 172 குழந்தைகள் மற்றும் 260 பெண்கள் உட்பட 2,196 லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த 10 நாள் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டுத் தலைவர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் அதிபரும் இந்த அமைதி முயற்சிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
