மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள புகழ்பெற்ற பிஎம்ஸ்ரீ மாதிரி அறிவியல் கல்லூரியில், ஒரு பேராசிரியர் மாணவி ஒருவருக்கு நள்ளிரவில் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ந்து தேவையற்ற மற்றும் அநாகரிகமான முறையில் பேராசிரியர் குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அந்த பேராசிரியரின் அத்துமீறல் தொடர்ந்ததால், இந்த விவகாரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், அந்த பேராசிரியரை நேருக்கு நேர் சந்தித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பேராசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரேவா பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.