இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நெதன்யாகு பொதுவெளியில் தோன்றாதது மற்றும் அவரது இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது போன்ற காரணங்களை முன்வைத்து ஈரான் ஊடகங்கள் இத்தகைய தகவல்களை வெளியிட்டன.

மேலும் அவரது சகோதரர் இத்தோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவீர் ஆகியோரும் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அந்தச் செய்திகளில் உண்மை இல்லை என இஸ்ரேல் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

 

ஈரானின் தஸ்னிம் செய்தி முகமை வெளியிட்ட இந்தத் தகவல்கள் அனைத்தும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான பெய்ட் ஷெமேஷ் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அங்கிருந்த மக்களிடையே உரையாற்றியதன் மூலம் அவர் நலமுடன் இருப்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேல் விமானப்படைத் தளபதியின் இல்லம் ஆகியவை ஈரானிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை மறுத்துள்ள அந்நாட்டு ராணுவம் பிரதமர் தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.