தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் குடும்ப விவகாரம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்திருந்தது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை விஜய், அவரது மனைவி மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று தரப்புக்கு இடைப்பட்ட விஷயமாகவே நான் பார்க்கிறேன். ஒரு தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட நான் விரும்பவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் அரசியல் பயணம் குறித்துக் குறிப்பிட்டதாவது: விஜய்யின் அரசியல் கருத்துகளுக்குப் பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாகக் கருத்து சொல்ல விரும்பவில்லை. பொதுவாக அரசியலுக்கு வந்துவிட்டால், அது தீப்பந்தத்திற்குள் புகுந்து வருவது போன்றதுதான்.
அரசியலுக்கு வரும்போது தோண்டப்படாத தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தோண்டப்படும் என்பது உலகறிந்த விதி. இதனை உணர்ந்துதான் விஜய் அரசியலுக்கு வந்திருப்பார் என்று நம்புகிறேன். எம்.ஜி.ஆர் காலத்திலேயே இது போன்ற சூழல்கள் இருந்தன. இத்தகைய அழுத்தங்களுக்கு இடையேதான் ஒருவர் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.”
இந்த விவகாரங்களால் விஜய்யின் அரசியல் பயணம் பாதிக்கப்படுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலில் நியாயம், தர்மம் எனப் பலவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கான விலையை அவர் கொடுத்துதான் ஆக வேண்டும். விஜய் இதைக் கடந்து செல்ல வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
