கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நடைபாதையில் அத்துமீறி நுழைந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூதாட்டி பிரபாவதி அம்மாவின் துணிச்சலான செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

எரஞ்சிப்பாலம் சிக்னல் அருகே ஒரு நபர் தனது ஸ்கூட்டரை நடைபாதையில் ஏற்றிச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த எழுபத்தி மூன்று வயது மூதாட்டி பிரபாவதி தனது கால்களை வழிமறித்து அவரைத் தடுத்து நிறுத்தினார். அந்த நபர் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் அங்கிருந்து நகர மறுத்ததுடன், தனது செல்போனில் அந்த வாகனத்தைப் புகைப்படம் எடுத்து அவருக்குப் பாடம் புகட்டினார்.

 

இறுதியில் அந்த நபர் தனது வாகனத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று சாலைக்கே திரும்பினார். இந்தச் சம்பவத்தைக் கண்ட மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள், பிரபாவதி அம்மாவின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

மேலும், பொது இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்த இவரின் செயலைப் பாராட்டிய அதிகாரிகள், போக்குவரத்து விதிகளை மீறிய அந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தையும் அதிரடியாக ரத்து செய்துள்ளனர்.