இன்றைய காலகட்டத்தில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கணவன் தட்டில் கொஞ்சம் ‘மஞ்சூரியன்’ மிச்சம் இருப்பதால், அதைச் சாப்பிட ஒரு ரொட்டி எடுத்து வருமாறு தனது மனைவியிடம் கேட்கிறார். அதற்கு அந்த மனைவி, “குழம்பு மிச்சம் இருப்பதால் ரொட்டி கேட்கிறீர்களா அல்லது பசியால் கேட்கிறீர்களா?” என்று கேட்க, கணவனும் கேஷுவலாக “பசி இல்லை, குழம்புக்காகத்தான் கேட்கிறேன்” என்று கூறுகிறார்.

உடனே சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த மனைவி தட்டில் இருந்த மிச்ச உணவை தானே எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, “பசி இல்லை என்றால் எதற்கு ரொட்டி?” என்று கிண்டலாகக் கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் இது கணவன் – மனைவி இடையே நடக்கும் ஒரு அழகான குறும்பு என்றும், உறவுக்கு இத்தகைய கேலிகள் அவசியம் என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ, “சாப்பிடும் போது கூட நிம்மதி இல்லாமல் கேமராவைத் தூக்கிக்கொண்டு வீடியோ எடுப்பது ஒரு நோய் போலப் பரவி வருகிறது” என்று கடுமையாக விமர்சிக்கின்றனர். “வீடு என்பது தனிப்பட்ட இடமாக இருக்க வேண்டும், அதைச் சர்க்கஸ் கூடாரமாக மாற்றாதீர்கள்” என்றும், “நிம்மதியாகச் சாப்பிடக் கூட விடாமல் கன்டென்ட் தேடுவது வருத்தமளிக்கிறது” என்றும் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.