நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஒருவழியாக வெற்றி பெற்று தப்பியுள்ளது. 148 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக, அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ரன் எடுக்க முடியாமல் திணறியதோடு, தனது ஸ்டிரைக் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற அழுத்தத்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியின் விளிம்பிற்குச் சென்ற நிலையில், ஃபஹீம் அஷ்ரப் கடைசி நேரத்தில் 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசி அணியை எப்படியோ வெற்றிபெறச் செய்தார். பாபர் அசாமின் இந்த மந்தமான ஆட்டம் குறித்து வர்ணனையாளர் முகமது கைஃப் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பாபர் அசாமிற்கு சிக்ஸ் அடிக்கும் அளவுக்கு உடலில் வலிமை (Power) இல்லை, அது அவர் பாணியும் இல்லை.

பந்துக்கு ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடுவதுதான் அவருக்கு வரும்” என்று கைஃப் நேரடியாகவே விமர்சித்துள்ளார். நெதர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராகக் கூட பாபர் அசாமால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறுவது, உலகத் தரம் வாய்ந்த வீரர் என்ற அவரது பிம்பத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.