மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் நகரில் நவ்கோங் சாலையில் உள்ள ஒரு பெயிண்ட் கிடங்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இது தற்செயலாக நடந்த விபத்து என்று கருதப்பட்ட நிலையில், இப்போது வெளியாகியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகள் ஒட்டுமொத்த நகரையும் அதிரவைத்துள்ளன.

கிடங்கின் உரிமையாளர் சுயாஷ் சுரோத்தியா, அருகில் உள்ள ‘கதி கூரியர்’ (Gati Courier) நிறுவனத்தை நடத்தி வரும் ராஜேந்திர சாஹு மற்றும் ரமாகாந்த் சாஹு ஆகியோர் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு நபர் திட்டமிட்டுக் குப்பைகளைச் சேகரித்து, கிடங்கின் ஷட்டர் அருகே வைத்துத் தீ வைப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தத் தீ மளமளவெனக் கிடங்கிற்குள் பரவி, அங்கிருந்த பெயிண்ட் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பஸ்பமாக்கியுள்ளது.

இதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

“திட்டமிட்டு என் வாழ்க்கையையே அழித்துவிட்டார்கள்” எனப் புலம்பும் சுரோத்தியா, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்.