சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருநங்கை ஒருவர் சாலையில் காரை மறித்து, கைகளைத் தட்டிப் பணம் கேட்டு அடாவடியில் ஈடுபடும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வதால், ‘திருநங்கைகள் என்றாலே இப்படித்தான்’ என்ற ஒரு மேம்போக்கான பிம்பம் பொதுமக்களிடையே உருவாகி வருகிறது. ஒரு சிலரின் இத்தகைய தவறான செயல்பாடுகள், ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகத்தின் மீதும் எதிர்மறையான அபிப்பிராயத்தை மக்கள் கொள்ள வழிவகை செய்கிறது. இத்தகைய அட்ராசிட்டிகள், சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் கேள்விக்குறியாக்குவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த ஒரு சிலரின் செயல்களை வைத்து ஒட்டுமொத்தச் சமூகத்தையும் எடைபோடுவது நியாயமற்றது என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி, கல்வி பயின்று அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சுயதொழில்களிலும் முத்திரை பதிக்கும் எத்தனையோ திருநங்கைகள் நம்மிடையே உள்ளனர். ஒரு தனிமனிதரின் தவறான நடத்தையை அந்த முழு சமூகத்திற்கும் பொருத்திப் பார்ப்பது, கடினமாக உழைக்கும் திருநங்கைகளின் மனவலிமையைக் குலைப்பதாக அமையும். எனவே, யாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், உழைத்து வாழும் திருநங்கைகளின் வாழ்வியலையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.