உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையில், உதவிப் பேராசிரியரின் முத்திரையைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரைத்த போலி நபர் பிடிபட்டார்.

மருத்துவமனையின் 25-ஆம் எண் அறையில் காசநோய் மற்றும் மார்பு நோய் நிபுணரான உதவிப் பேராசிரியர் டாக்டர் துஷார் சிங் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை அவர் இல்லாத நேரத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் துஷார் சிங்கின் அதிகாரப்பூர்வ முத்திரையைப் பயன்படுத்தித் தீவிர நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைத்துக் கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களாக இங்கிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மருந்துச் சீட்டுகள் வருவதைக் கவனித்த மருந்தக ஊழியர்கள், அந்த அறைக்குச் சென்று சோதனை நடத்தியபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஊழியர்களின் விசாரணையில் அந்த நபர் தன்னை துஷார் சிங்கின் உதவியாளர் எனத் தற்காத்துக் கொண்ட நிலையில், அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் துஷார் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

இந்தச் சலசலப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் போலி நபர் அங்கிருந்து லாவகமாகத் தப்பியோடினார். இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் துஷார் சிங் கூறுகையில், “எனது உதவியாளர் என்று கூறிக்கொண்ட நபரை எனக்குத் தெரியாது, நான் இல்லாத நேரத்தில் பயிற்சி மருத்துவர்களே நோயாளிகளைக் கவனிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், போலி மருத்துவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பிஜ்னோர் மாவட்ட மருத்துவமனை தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.ஆர். தியாகி கூறுகையில், “சம்பவம் தொடர்பாக இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை என்றாலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“>

 

தவறு செய்தவர்கள் மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். அரசு மருத்துவமனையிலேயே முத்திரையைத் திருடி போலி நபர் சிகிச்சை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.