இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மேக்னெட்டோ மாலில் (Magneto Mall) செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஒரு கும்பல் அராஜகமாக அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மாலில் பணிபுரியும் ஊழியர்களையும் மிரட்டிய அந்தக் கும்பலின் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பண்டிகை காலத்தில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​சமீபகாலமாக இதுபோன்ற சகிப்புத்தன்மையற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலையை அளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவிலும் தெருவோரம் கிறிஸ்தவப் பொருட்களை விற்றவர்களை,

“இது இந்து ராஷ்டிரம், இங்கே இவற்றை விற்கக்கூடாது” என்று ஒரு கும்பல் மிரட்டிய வீடியோ வைரலானது. அமைதியையும் அன்பையும் போதிக்கும் ஒரு பண்டிகை நாளில், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.