விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய விராட் கோலி, ஆந்திர அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாகச் சதம் விளாசித் தனது வருகையை முத்திரை பதித்துள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டெல்லி அணிக்காக விளையாடிய கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
View this post on Instagram
மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், கோலியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மரங்களின் மீது ஏறியும், அருகில் உள்ள கட்டிடங்களின் பால்கனியில் நின்றும் ஆவலுடன் பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு அலுவலகத்தின் பால்கனியில் இருந்து கோலியின் சதத்தை நேரலையாகப் பார்த்த பெண் ஊழியர் ஒருவர், அந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பகிர்ந்து ‘அதிர்ஷ்டசாலி ரசிகை’ என்று சமூக வலைதளங்களில் புகழப்பட்டு வருகிறார்.
இந்தப் போட்டியின் மூலம் விராட் கோலி ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் போட்டிகளில் 16,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.
