காட்டுயிர் உலகில் யானைகள் பொதுவாகச் சாதுவான விலங்குகளாகக் கருதப்பட்டாலும் அவை ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும்போது ஒட்டுமொத்த காடே அதிர்வதை விளக்கும் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் நின்றிருந்த ஒரு பிரம்மாண்ட யானையை நோக்கி மற்றொரு யானை சீறிப் பாய்ந்து வந்ததும் இரு விலங்குகளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

 

இந்த மோதலின் வீரியத்தால் யானைகளின் உடலில் இருந்தும் நிலத்திலிருந்தும் புழுதி மேகங்கள் விண்ணை எட்டின. ஒன்றையொன்று பின்னுக்குத் தள்ள முழு பலத்தையும் பிரயோகித்து நடத்திய இந்தப் பலப்பரிட்சை காண்போரை உறைய வைத்தது. ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்தக் காட்சியை சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

காட்டின் உண்மையான வலிமையை இந்தப் போர் வெளிப்படுத்துவதாகப் பலரும் வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவை ஆப்பிரிக்க யானைகளை விடச் சற்றுச் சிறியதாகத் தெரிவதால் இவை இந்திய யானைகளாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளப் பயனர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.