உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் நடந்த ஒரு சோகமான விபத்தில், ஆயில் டேங்கர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளியில், ஆயில் டேங்கர் லாரி நின்ற பிறகு, கையில் பிளாஸ்டிக் கேனுடன் ஒருவர் லாரியில் இருந்து கீழே இறங்கிச் சாலையில் நடக்கத் தொடங்குகிறார்.

அவர் நடந்து சென்ற சில நொடிகளிலேயே, டேங்கர் லாரியும் நகரத் தொடங்குகிறது. அந்த நபர் சாலையின் நடுவில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் மோதி அவர் கீழே விழுந்தார், அதன்பிறகு டேங்கரின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

​இந்த விபத்துக்குப் பிறகு, ஆயில் டேங்கர் லாரி சிறிது நேரம் நின்றாலும், பிறகு மீண்டும் அந்த நபரின் உடல் மீது ஏறிச் சென்றுவிட்டு, அதிவேகமாகத் தப்பி ஓடிவிட்டது. இந்த விபத்தைப் பார்த்த பாதசாரிகள் பலரும் அவ்விடத்தில் நின்றிருந்தாலும், யாரும் அந்த நபருக்கு உதவ முன்வரவில்லை என்று சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. ஆவொன்லா காவல் நிலையப் பகுதியில் உள்ள பக்ரென் டிப்போ அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.

இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ வைரலான பிறகு, பரேலி போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.