தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், காதலை நிராகரித்த காரணத்துக்காகக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் – மலர் தம்பதியரின் மூத்த மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வினிஷ்காவும் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்பவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த நிலையில், வினிஷ்காவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், அவர் தனது காதலைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாதேஷ், அவ்வப்போது வினிஷ்காவின் வீட்டின் அருகே வந்து தொடர்ந்து அவருக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.
காதலன் மாதேஷின் தொடர்ச்சியான தொல்லைகளைத் தாங்க முடியாமல் மன உளைச்சல் அடைந்த வினிஷ்கா, கடந்த 15-ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கினார். உடனடியாகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினிஷ்கா, மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, வினிஷ்காவின் உறவினர்கள், அவரது மரணத்திற்குக் காரணமான மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென , ஜோலார்பேட்டை அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
