ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக மக்கள் கடைகளுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர். சிலர் இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால், தங்கள் சமூக வலைதள பின்தொடர்பவர்களிடம் நன்கொடை கேட்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதில், உத்தரபிரதேசத்தின் லகிம்பூரைச் சேர்ந்த ‘பியூட்டி குயின்’ மாஹி சிங் என்ற பெண், இந்த ஐபோனை வாங்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என தனது பின்தொடர்பவர்களிடம் கேட்டு சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளார்.

மாஹி சிங் தனது வீடியோவில், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது தந்தை ஐபோன் 16 வாங்கிக் கொடுத்ததாகவும், ஆனால் இப்போது புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். “இந்த ஐபோனின் நிறம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது பிறந்தநாளான அக்டோபர் 21 அன்று இதை வாங்க விரும்புகிறேன். ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ நீங்கள் உதவினால், என் கனவு நனவாகும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் @Sajid7642 என்ற ஐடியில் பகிரப்பட்டு, 38,000 முறை பார்க்கப்பட்டு, பலரால் விரும்பப்பட்டு, வேடிக்கையான மற்றும் கிண்டலான கருத்துகளைப் பெற்றுள்ளது. ஒரு பயனர், “நானும் என் கனவை நிறைவேற்ற ஸ்கேனர் வைக்கலாமா?” என்று கேலி செய்ய, மற்றொருவர் “இதுதான் டிஜிட்டல் பிச்சை” என்று கூறியுள்ளார்.