உத்தரப்பிரதேசம், ஹமீர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிரடித் திருட்டு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல இல்லாத இந்த திருட்டில், கொள்ளையர்கள் காரில் வந்து வீட்டுப் பன்றியை கடத்தியுள்ள சம்பவம், முழுவதுமாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நால்வர் கொண்ட ஒரு கும்பல் வெள்ளை நிற காரில் வந்து, ஒரு தெருவில் காரை நிறுத்துகின்றனர். காரின் இஞ்சினை ஆஃப் செய்து, சுற்றியுள்ள சூழலை ஆராய்ந்தபின், நால்வரும் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு பன்றியை குறிவைத்து சுற்றிவளைக்கிறார்கள். பன்றியையும், அந்த பகுதியில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தையும் அந்தக் கும்பல் கவனித்திருந்தது.

பன்றி தப்பிக்க முயற்சிக்க, அந்த நால்வரும் ஒருங்கிணைந்த முறையில் அதை பிடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நொடிகளில் பன்றி அலறி அடித்து ஓட முயற்சிக்கிறது. இறுதியில், பன்றியை பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி கொள்ளையர்கள் தப்பி ஓடுகிறார்கள். அதற்குப் பின்னால், இருசக்கர வாகனமும், சில கால்நடைகளும் காரை துரத்திய காட்சி பதிவாகியுள்ளது.