மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோ, கனமழையால் ஏற்படும் ஆபத்துகளையும், சரியான நேரத்தில் தலையீடு இல்லாததையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வீடியோவில், முதியவர் தனியாக நின்று, ஆதரவுக்காக ஒரு குச்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரை காப்பாற்ற முயன்று, அவரது சட்டையைப் பிடிக்க முயல்கிறார். ஆனால், மெல்லிய கிளையைப் பிடித்த முதியவர், குச்சி கைநழுவியதால் நிலைதடுமாறி, வேகமாக பாய்ந்த ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படுகிறார்.

வீடியோவின் இறுதிக் காட்சிகளில், முதியவர் நீரோட்டத்துக்கு எதிராக நீந்த முயற்சிக்கிறார், ஆனால் பலமிழந்து ஆற்றில் மூழ்குகிறார். இதைப் பார்த்த பொதுமக்கள், “கெலா, கெலா” (போய்ட்டார், போய்ட்டார்) என கத்துவதைத் தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. காப்பாற்ற முயன்ற இளைஞரும் கூட பின்னர் நடந்து சென்றுவிடுகிறார்.

 வைரலான இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் மனிதாபிமானமற்ற கருத்துகள் பதிவாகியுள்ளன. “அவசரமாக அங்கு ஏன் போனார்?” என்றும், “நாளை அவர் உடல் கிடைத்தால் சொல்லுங்கள்” என்றும், சிலர் சிரிப்பு எமோஜிகளுடன் கேலி செய்கின்றனர்.

யவத்மால் மற்றும் விதர்பா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் பின்னணியில், இந்த சம்பவம், பொது விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளின் அவசியத்தை கோருகிறது. ஆபத்தான இடங்களில் நுழைய தடை, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இல்லாதது இதுபோன்ற துயரங்களை தடுக்க தவறியுள்ளார்.