ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரிநகர் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி கடும் பதட்டம் ஏற்பட்டது. டெல்லி நோக்கி புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்ல தயாராக இருந்த ஒரு ராணுவ அதிகாரி, அதிக எடையுள்ள கைப்பையை எடுத்துச் சென்றதால் கட்டணம் கட்ட வேண்டியதாக விமான ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், அதைக் கேட்டு கோபமடைந்த அதிகாரி, ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களை திட்டித் தாக்கி கொடூரமாக நடந்துகொண்டார்.

 

அந்த அதிகாரி இரண்டு கைப்பைகள் கொண்டு வந்திருந்தார். அவை சேர்ந்து 16 கிலோ எடையுடன் இருந்ததாகவும், விதிமுறைகளின்படி 7 கிலோ வரை மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படும் என்பதையும், மீதமுள்ள எடைக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சண்டை வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரி திடீரென கையால், காலால் தாக்கியதோடு, அருகில் இருந்த கியூ ஸ்டாண்ட் பயன்படுத்தியும் ஊழியர்களை தாக்கினார்.

இந்த தாக்குதலில் 4 ஊழியர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். ஒருவருக்கு முதுகுத்தண்டுவாரத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இன்னொருவர் மயங்கி விழுந்து நிலை இழந்தபோதும் அவர் மீது தொடர்ந்து அடித்துள்ளார். மேலும் ஒருவர் தாடையில் கால் அடிபட்டதால் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தாக்குதலைக் கட்டுப்படுத்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போலீசில் புகார் அளித்து, அவரை விமானப் பயணத்துக்கு தடை செய்யும் நோ-பிளை லிஸ்டில் சேர்க்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்திய இராணுவம் கவனம் செலுத்தி, விசாரணை நடத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.