
திருத்தணி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் நிலம் வாங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படி பதிவு செய்தார். இவர் வாங்கிய இடத்திற்கு அருகே பார்த்திபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் விவசாயம் செய்து வந்தார்.
தான் வாங்கிய இடம் தங்களுக்கு சொந்தமானது போல பார்த்திபன் போலியான ஆவணம் வைத்திருந்ததை அறிந்த வெங்கடேசன் தன்னிடம் இருக்கும் ஆவணங்களை சரி பார்த்துள்ளார். அதே சமயம் பார்த்திபன் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரையும் குடும்பத்தினர் சமாதானம் செய்தனர். பின்னர் இருவரும் ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நிலம் வெங்கடேசனுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனால் கோபமடைந்த பார்த்திபன் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று வெங்கடேசன் ஆந்திர மாநிலம் இல்லத்தூர் சாலை வழியாக உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பார்த்திபன் அவரை வழிமறித்து காலங்காலமாக அந்த நிலத்தில் நான் தான் பயிர் செய்வேன். நீ வந்து நிலத்தை சொந்தம் கொண்டாடுவியா என கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெங்கடேசனின் முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.