சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை கழுவது போன்ற வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜீவ் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது, பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி முட்டை மற்றும் உணவு சமைப்பதில் ஊழல் செய்ததாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உணவு பாத்திரத்தை கழுவுவது போலவும், பள்ளி வளாகத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போலவும் சத்துணவு அமைப்பாளர் வீடியோ எடுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு எடுத்து வீடியோவை பழிவாங்கும் நோக்கத்தில் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.