வீட்டு வாசற்கே தேடி வரும் ‘டோர்ஸ்டெப்’ டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், வாஷ்ரூம் பயன்படுத்த வேண்டும் என்று பொய் கூறி பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு  பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர், தனது வீட்டின் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக ‘உபெர்’ பார்சல் சேவை மூலம் அதை வரவழைத்துள்ளார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி காலையில், மகேஷ் என்ற டெலிவரி ஊழியர் அந்தப் பத்திரத்தைக் கொண்டு வந்துள்ளார். வந்த இடத்தில், அந்தப் பெண்ணிடம் வழக்கமான ஓடிபி  எண்களைக் கேட்டுள்ளார்.

அந்தப் பெண் ஓடிபி எண்களைப் பார்ப்பதற்காகத் தனது மொபைல் போனை எடுக்க வீட்டிற்குள் சென்ற சமயம், மகேஷ் திடீரென அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தனக்கு அவசரமாக வாஷ்ரூம் செல்ல வேண்டும் என அவர் கேட்க, அதற்கு அந்தப் பெண் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மறுப்பையும் மீறி மகேஷ் வாஷ்ரூமிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து வெளியில் வந்த அவர், ஆடைகள் ஏதுமின்றி அந்தப் பெண் முன்னிலையில் அநாகரிகமாக நின்றுள்ளார்.

இதனால் நிலைகுலைந்து பயந்துபோன அந்தப் பெண், அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்புப் பாதுகாவலரும் உடனடியாக அந்த டெலிவரி ஊழியரை மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனர். பின்னர்  போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஷைக் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் இதேபோல வாஷ்ரூம் கேட்கும் சாக்கில் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கைதானது குறிப்பிடத்தக்கது. இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் பெங்களூரு மக்களிடையே, குறிப்பாகத் தனியாக இருக்கும் பெண்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.