
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 14 கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.
இந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் முறையே, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முறையாக தலைமுடியை வெட்டி இருக்க வேண்டும். பள்ளிக்கு விடுமுறை எடுப்பதற்கு முன் பெற்றோரிடம் முறையான அனுமதி பெற்று அதற்கான ஒப்புதலை ஆசிரியரிடம் கொடுத்திருக்க வேண்டும். காரணம் இல்லாமல் விடுப்பு எடுத்திருந்தால் மறுநாள் பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.
மேலும் மாணவர்கள் தங்களின் கைகளில் வண்ண கயிறுகள் எதுவும் கட்டியிருக்கக் கூடாது. மாணவிகள் தங்களின் நெற்றியில் கலர் கலராக பொட்டுகளையும் கலர் கலரான ரிப்பனையும் அணிய கூடாது. சீருடைக்கு கொடுக்கப்படும் ரிப்பனை மட்டுமே அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க தினமும் அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். தினமும் பள்ளிக்கு வரும்போது அனைத்து மாணவர்களின் புத்தகப் பைகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் இது போன்ற சம்பவங்கள் வரப்போகும் ஆண்டுகளில் நிகழாமல் இருப்பதற்காகவும், மாணவர்களின் நல்லொழுக்கத்தை பேணும் வகையிலும் இந்த 14 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.