
கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர மாகாணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு. இவரது மகன் சதாசிவம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கொங்கானப்பள்ளி சாலையில் செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை பெங்களூரு சிபிஐ காவல்துறை கண்காணிப்பாளர் சாய் திறன் தலைமையில் டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் இரண்டு பிரிவாக சதாசிவத்தின் வீடு மற்றும் கடையில் சோதனை நடத்தினர்.
அந்த கடையில் இருந்த மடிக்கணினி 3 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சதாசிவத்தை டெல்லிக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து சதாசிவத்தின் குடும்பத்தினரிடம் சிபிஐ அலுவலர்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதாசிவத்தின் கடைக்கு ஒரு நபர் வந்துள்ளார்.
அவர் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி அந்த எண் மூலம் பல்வேறு மோசடி பண பரிவர்த்தனை செய்துள்ளார். அது தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சதாசிவத்தை விசாரணைக்காக கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.