தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் வசிக்கும் அர்ச்சனா காமத், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி, திடீரென மரணமடைந்தார். 33 வயதான அர்ச்சனா, மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்.பி.ஏ. கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அவரது கணவர் சேத்தன் குமார் மற்றும் 4 வயது மகன் உள்ளனர். கணவரின் உறவினருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால், மாற்று கல்லீரல் தேவைப்பட்டது.

அர்ச்சனாவின் ரத்தப்பிரிவு சம்பந்தப்பட்டதால், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக அளிக்க முன் வந்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின், அர்ச்சனா மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வெடுத்து, தனது வீட்டிற்கு திரும்பினார். அதன் பிறகு, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எதிர்பாராத வகையில், அர்ச்சனா செப்டம்பர் 15ம் தேதி மரணமடைந்தார். இதன் காரணம் குறித்து மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். கல்லீரல் தானம் பெற்ற பெண் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அர்ச்சனாவின் மறைவால் அவரது குடும்பம் மிகுந்த சோகத்தில் இருக்கிறது.