நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார்.

பிகார் மாநிலத்தில்  மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் அசாம், இமாச்சல், உத்தராகண்ட், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவிக்கரம் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், வெல்ல பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.