கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன் அழுகிறீர்கள் என போலீஸ் சூப்பிரண்டு கேட்டார். அதற்கு முதியவர் கூறியதாவது, எனது பெயர் பால்ராஜ். நான் ஆணைகுப்பத்தில் வசித்து வருகிறேன். காலையில் சாப்பிடவில்லை எனவும், எனது மகன், மகள் இருவரும் சாப்பிடுவதற்கு பண உதவி செய்ய மறுக்கிறார்கள் எனவும் கண்ணீர் மல்க கூறினார்.

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு முதியவரின் கையைப் பிடித்து காவலர் சிற்றுண்டி விடுதிக்கு அழைத்துச் சென்று தனது சொந்த செலவில் அவருக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த முதியவர் சாப்பிட்டு முடிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு புகார் சம்பந்தமாக உங்களது மகன் மற்றும் மகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு பால்ராஜ் போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டை நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் பலர் பாராட்டி வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.