சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் சார்லஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருவாலங்காடு பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தொழுவூர் தொகுதியில் சி.டி.எச் சாலையில் சென்ற போது 2 மாடுகள் சண்டை போட்டுக் கொண்டே சார்லஸின் ஆட்டோ மீது முட்டியது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததால் சார்லஸ் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சோபியா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சார்லஸ் மற்றும் மேரி சைலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.