திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்தார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் கோனிகாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பிறகு அறைக்கு வந்த கோனிகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.