வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜயின் தோற்றம் குறித்து பிரபல இசையமைப்பாளர் விமர்ச்சித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜயின் தோற்றம் பற்றி விமர்சித்தார்.

இது பற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.
இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது.
தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து நன்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய ஸ்டாரை விமர்சித்து பொதுவெளியில் என்னை தவிர தமிழ்நாட்டில் ஒருத்தரும் எழுத மாட்டாங்கனு எனக்கு தெரியும். ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததினால் தான் நான் எழுதினேன். இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை விமர்சித்தால் அவரது ரசிகர்கள் என்னிடம் எந்த அளவிற்கு நடந்து கொள்வார்கள் என எனக்கு தெரியாதா என்ன? 27 ஆண்டுகளாக தமிழ் ஊடகத்தில் இருக்கின்றேன்/ ஆனால் எனக்கு மூத்த பத்திரிகையாளராக ஒரு கடமை இருக்குது. எதிர்ப்புகளைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது என தெரிவித்துள்ளார்.