சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், அங்குள்ள குவாங்ஷி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியின் ஹெங்ஜோ நகரில் உள்ள டெங்வேய் கிராமத்தில் எதிர்பாராத புதிய அச்சுறுத்தல் ஒன்று உருவாகியுள்ளது. அங்குள்ள ஒரு தனியார் பாம்பு வளர்ப்புப் பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அதன் கட்டமைப்பு முற்றிலும் சரிந்து விழுந்தது. இதன் காரணமாகப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோப்ரா உள்ளிட்ட சுமார் 900 கொடிய விஷப் பாம்புகள் வெள்ள நீரில் தப்பித்து, ஒட்டுமொத்த கிராமப் பகுதியிலும் பரவியுள்ளன. வெள்ள நீரில் அச்சுறுத்தும் வகையில் பாம்புகள் கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்லும் அச்சுறுத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

 

ஒருபுறம் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம், மறுபுறம் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் விஷப் பாம்புகளின் ஊடுருவல் என டெங்வேய் கிராம மக்கள் தவித்துப் போய் உள்ளனர். ஏற்கனவே சிலரை இந்த விஷப் பாம்புகள் கடித்ததால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதியில் மருத்துவத் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதையடுத்தும் 10 பேர் கொண்ட சிறப்புப் மீட்புக் குழுவினர் பிரத்யேக வலைகள் மற்றும் மின்சாரக் கருவிகளுடன் பாம்புகளைத் தேடிப் பிடிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர். நிலைமை தீவிரமடைந்துள்ளதால், மக்கள் யாரும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உள்ளூர் நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.