உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்ட அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த 85 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் மீது மருத்துவர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணி சேனா அமைப்பின் நிர்வாகியான தேவேந்திர சிங், விபத்தில் காயமடைந்த தனது வயதான தாய் சாவித்திரி தேவியை அழைத்துக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் வினோத், முறையாகப் பரிசோதிக்காமல் நேரடியாக மாவுக்கட்டு போடச் சொல்லியுள்ளார். “முதல்ல எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்துட்டு கட்டுப் போடுங்க டாக்டர்” என்று தேவேந்திர சிங் உரிமையுடன் கேட்டதுதான் வினையாக முடிந்தது.

​இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் தேவேந்திர சிங்கை கன்னத்தில் அறைந்ததுடன், அங்கிருந்த பாதுகாவலர்களும் சேர்ந்து கொண்டு அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த மோதலில், தடுக்க வந்த 85 வயது மூதாட்டியின் கையை முறுக்கித் தள்ளிவிட்டதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. “மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய இடத்துல இப்படி ரௌடித்தனம் பண்றாங்களே” என அங்கிருந்தவர்கள் கொந்தளித்ததால் சுமார் 2 மணி நேரம் மருத்துவமனையே போர்க்களமாக மாறியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.