சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்து பார்த்ததில், கட்டுக்கட்டாக 70 லட்ச ரூபாய் பணம் இருந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதில் அவர், சென்னை ஏழுகிணறு பகுதியில் வசிக்கும்  சஹாபுதின் (வயது 57) என்பதும், பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் அதை  பறிமுதல் செய்தனர். இதன்பின் பறிமுதல் செய்த பணத்தை  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.