திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இன்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு செயல்பட தொடங்கி நிலையில் ஒரு வாலிபர் கையில் ஸ்பிரே, கத்தி, கட்டிங் பிளேடு போன்றவைகளுடன் வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பிறகு வாலிபர் வங்கியில் பணியில் இருந்த 3 ஊழியர்களின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு அவர்களின் கைகளை கட்டி போட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு ஊழியர் உடனடியாக வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார்.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவலாளி வங்கிக்குள் நுழைந்து வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கலில்குமரன் (25) என்பது தெரியவந்தது. இந்த வாலிபர் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக துணிவு உள்ளிட்ட வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை பார்த்துவிட்டு வங்கியை கொள்ளை அடிக்க வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.