இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்குள் பல குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ரவி ஜெயராம் என்பவர் லூசி லெட்மி என்ற செவிலியர் மீது சந்தேகத்தை எழுப்பினார்.

இதை அடுத்து செவிலியரின் வீட்டை சோதனை செய்த போது உயிரிழந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் உடல்நிலை சரியில்லாமல் பிறந்த குழந்தைகள் மற்றும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு செவிலியர் லூசி அதிக அளவு பால் கொடுத்தும் இன்சுலின் மூலம் விஷம் போட்டும் ரத்தத்தில் காற்றை கலந்தும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஏழு குழந்தைகளை அவர் கொலை செய்ததற்காகவும் ஆறு குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்ததற்காகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் லூசி மீது தொடரப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டு வரும் திங்கட்கிழமை அவருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.