மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேப்போல் போலி மருந்துகளும் கண்டறியிடப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டும் 1,348 மருந்துகள் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் சளி, இரும்புச்சத்து, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, கால்சியம், காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் விவரங்களை மத்திய மருந்துகள்  தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.