தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு எழுத ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எழுத்து தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக பொது விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும் காவல்துறை விண்ணப்பத்தாளர்கள் 30 மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வு எழுத விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம்.